ரஜினி, கமலுக்கு அடையாளமாய் இருக்கும் படம்.. பாதியிலேயே கைவிடப்பட இருந்த காரணம்

இரு பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் இப்போது தங்கள் வழிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரு படம் இன்று வரை அவர்களுக்கான முகவரியாய் இருக்கிறது.

அப்படிப்பட்ட படம் நிதி நெருக்கடியால் பாதியிலேயே கைவிடப்பட இருந்தது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஒருவர் செய்த உதவியால் அப்படம் இன்று பலருக்கும் ஒரு அடையாளமாக மாறி இருக்கிறது. பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த 16 வயதினிலே திரைப்படத்திற்கு தான் இப்படி ஒரு சோதனை வந்ததாம்.

அதன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த சமயத்தில் தயாரிப்பாளருக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் இயக்குனரிடம் இதற்கு மேல் செலவு செய்ய முடியாது படத்தை நிறுத்திவிடுங்கள் என்று கூறி இருக்கிறார். இதனால் பாரதிராஜா ரொம்பவும் பதறிப் போயிருக்கிறார். ஏனென்றால் அது தான் அவருடைய அறிமுகப்படம்.

5 லட்சம் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட அப்படத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இருந்தால் முடிந்து விடும் என்ற நிலை இருந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் வேண்டுமானால் அது குறைவான தொகையாக இருக்கலாம். ஆனால் அது அப்போது மிகப்பெரும் தொகை தான். அந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவியின் அப்பா அந்த பணத்தை கொடுத்து உதவி இருக்கிறார்.

ஏனென்றால் ஸ்ரீதேவி அப்போதுதான் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே அவரின் அப்பா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உதவி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் படத்தின் கதை மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் ஒரு காரணம்.

அதன் பிறகு படம் ஒரு வழியாக வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. மேலும் சப்பாணி, பரட்டை, மயிலு போன்ற கதாபாத்திரங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஸ்ரீதேவியின் அப்பா மட்டும் தக்க சமயத்தில் இப்படி ஒரு உதவி செய்யாமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவிற்கு 16 வயதினிலே போன்ற படம் நிச்சயம் கிடைத்திருக்காது.