தற்போது டாப் நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்த பின்பு தான் தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றனர். ஆனால் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ஒரு ஹீரோ.
அரசியல் சூழ்ச்சிகளை தோலுரித்து காட்டும் விதமாக ஒரு படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து இருந்தார். அந்த படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. ஆனால் அதன் பின்பு காணாமல் போன அந்த நடிகர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
உறியடி படத்தின் மூலம் அறிமுகமான விஜயகுமாரை தான் மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். சாதி வெறி கொண்ட ஆட்களால் அப்பாவி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சுவாரசியமாக எடுத்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார் விஜயகுமார்.
அதன்பின்பு அவர் இயக்கிய உறியடி படத்தின் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 5 தேசிய விருதுகளை பெற்ற சூரரை போற்று படத்திற்கு விஜயகுமார் எழுத்தாளராக பணியாற்றியிருந்தார்.
ஆனால் விஜயகுமாரை திரையில் காண முடியவில்லை என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் விரைவில் அவர் ஹீரோவாக நடித்த படம் ஒன்று வெளியாக உள்ளது. சினிமாவில் சின்ன இடைவெளி எடுத்துக்கொண்ட விஜயகுமார் தற்போது முழுவீச்சாக தனது பட வேலைகளில் செயல்பட்டு வருகிறார்.
கிராமத்து கதையம்சம் கொண்ட அரசியல், அக்ஷன் கலந்த படத்தில் விஜயகுமார் நடித்து வருகிறார். இப்படத்தை இரண்டு மாத அவகாசத்தில் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதனால் உறியடி போன்று சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.