Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி பட சூட்டிங் பல மாதங்கள் தாமதமாகி இப்போது ஒரு வழியாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆக்சன் திரில்லர் கதை களத்தை கொண்டு தயாராகிறது. இதற்காக ரசிகர்கள் இப்போது பேரார்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அஜித் கதை பிடித்தும் நடிக்க முடியாமல் போன ஒரு படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விவேகம் படத்தை முடித்துக் கொடுத்த பிறகு அஜித் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அதற்கு அதிக நாட்கள் கால்ஷீட் தர வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் இன்னும் அந்த படத்தில் நடிக்காமல் இருக்கிறார்.
ஆனால் நிச்சயம் இப்படம் உருவாகும் என்று அஜித்தின் நண்பரும் இயக்குனருமான விஷ்ணுவர்தன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் அந்த கதையை சொல்லியதே அவர்தான். அந்த வகையில் தஞ்சாவூர் கோவிலின் வரலாற்றையும் அது எப்படி கட்டப்பட்டது என்கிற விவரம் தான் அந்த படத்தின் கதையாம்.
பொதுவாக இது போன்ற வரலாற்று கதைகளை எடுத்து முடிப்பதற்கு அதிக காலதாமதம் ஆகும். அதனாலேயே விஷ்ணுவர்தன் அஜித்திடம் 300 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நீண்ட தலைமுடி, கட்டுமஸ்தான உடல்வாகு இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.
இதனால் யோசித்த அஜித் அது உடனே சாத்தியம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இப்படத்தை சில காலம் தள்ளி போட்டு இருக்கிறாராம். இருப்பினும் இந்த கதை நிச்சயம் படமாக உருவாகும், அதில் அஜித் நடிப்பார் என்று விஷ்ணுவர்தன் ஆணித்தரமாக கூறுகிறார்.
அந்த வகையில் அஜித் இப்படி ஒரு கதையில் நடிக்க உள்ளார் என்ற செய்தியே ரசிகர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் விடாமுயற்சியே இவ்வளவு காலம் தள்ளிப்போன நிலையில் இந்த படம் இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து தொடங்கும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.