மருத்துவமனையில் அஜித்தின் தம்பி.. சூர்யா 42 ஷூட்டிங்கை நிறுத்திய சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா அண்ணாத்த படத்திற்கு பிறகு சூர்யா 42 திரைப்படத்தில் பிசியாகி இருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் 3டி பீரியாடிக் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா 5 மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பதானியும் நடித்து வருவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சிறுத்தை சிவா திடீரென இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறாராம். அதாவது இவருடைய தம்பி பாலா தற்போது உடல்நல குறைவால் கொச்சியில் இருக்கும் அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு கல்லீரல் பாதிப்பிற்காக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் பாலா அஜித்துக்கு தம்பியாக வீரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் அம்ருதா என்ற மலையாள பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் சில கருத்து வேறுபாடால் தன் மனைவியை விவாகரத்து செய்த அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் உடல்நல பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர்கள் உன்னி முகுந்தன் உட்பட பல பிரபலங்களும் அவரை மருத்துவமனையில் சந்தித்து வருகின்றனர்.

மேலும் அவர் நன்றாக பேசுவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. கடந்த பல மாதங்களாகவே சூர்யா 42 படத்தில் பிசியாக இருந்த சிறுத்தை சிவா தற்போது தன் தம்பிக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அனைத்து வேலைகளையும் கேன்சல் செய்து இருக்கிறார்.

தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவர் தன் தம்பி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது.