ஒரு புழு, பூச்சிக்கு கூட நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தான் கேப்டன் விஜயகாந்த் என்று பல பிரபலங்கள் விஜயகாந்தை பற்றி புகழ்ந்து பேசுவார்கள். அந்த அளவுக்கு நம்பி வந்தவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக்கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்கம் கடன் பிரச்னையில் இருந்தபோது மொத்த தமிழ் சினிமாவையும் காப்பாற்ற இவர் செய்த நல்ல காரியங்களை யாராலும் மறக்க முடியாது.
இன்று ஹீரோ முதல் லைட்மேன்கள் வரை ஒரே சாப்பாட்டை படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடுகிறார்கள் என்றால் அதற்கு விதையாய் அமைந்தது விஜயகாந்த் தான். இப்படி கேப்டனை பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே போகலாம், அந்த அளவுக்கு பலரது வாழ்க்கையில் விளக்காக அமைந்தவர். அந்த வகையில் இவரால் வளர்ந்த பிரபல நடிகரால், அவருக்கு அன்றிலிருந்து இன்றுவரை அழியாத பெரும் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் பல கஷ்டங்களை கடந்து வாய்ப்புகளை பெற்று வந்ததால், தன்னை போல மற்ற நடிகர்கள் வாய்ப்புக்காக கஷ்டப்படக்கூடாது என தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்களுக்கு தனது படங்களில் நடிக்க வைத்து வாய்ப்புகளை வழங்குவார். அப்படி விஜயகாந்த் வாய்ப்புக்கொடுத்து நடிக்க வந்தவர் தான் நடிகர் சரத்குமார்.
விஜயகாந்த் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான புலன் விசாரணை திரைப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் சரத்குமார் நடித்திருப்பார். அந்த சமயத்தில் சரத்குமாருக்கு பெரிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவரது கட்டுமஸ்தான உடலையும், அவரது திறமையையும் பார்த்து விஜயகாந்த் இப்படத்தில் சரத்குமாருக்கு நடிக்க வாய்ப்பினை கொடுத்தார்.
தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சரத்குமாரை பத்திரிக்கைகள் கொண்டாட தொடங்கினர். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்தை மறந்து சரத்குமாரின் பெயர் தான் அனைத்து பத்திரிக்கைகளிலும் அதிகம் வரத் தொடங்கியுள்ளது. இதையெல்லாம் பார்த்த விஜயகாந்துக்கு, தான் வாய்ப்புக்கொடுத்து வளர்த்து விட்ட நடிகர் தன்னைவிட அதிக பெரும் புகழையும் அடைந்துள்ளாரே என சிறிய பொறாமையுடன் வலம் வந்ததாக பிரபல யூடியூபர் வலைப்பேச்சு பிஸ்மி அண்மையில் கூறினார்.
மேலும் பேசிய அவர் விஜயகாந்த் நடித்து மெகாஹிட்டான வாஞ்சிநாதன் படத்தின் வெற்றி விழாவின் போது விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்துள்ளார். அப்போது அவருக்கு என்னதான் ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பினார்களாம். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், சரத்குமாரை பத்திரிக்கைகள் தூக்கி வைத்து கொண்டாடுவது தனக்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாக கூறினாராம். இதன் பின்னரே விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டார் என்ற கரும்புள்ளி தற்போது வரை அவர் மீது உள்ளதாம்.