நடிகர் விஜயின் நடிப்பில் வரும் 12 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் ரிலீசாக உள்ள வாரிசு படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், வி.டி.வி.கணேஷ், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.தெலுங்கு தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ் தயரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் படையுடன் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது வாரிசு படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு விஜயை புகழ்வதில் மாறி மாறி நீ பெருசா, நா பெருசா என ஒவ்வொருவரும் போட்டிப்போட்டு மேடையில் புகழ்ந்து தள்ளினர். விஜயும் அவர்களை உசுப்பேத்தும் விதமாக மேடையில் ஏறி, நான் தான் எனக்கு எதிரி என்றெல்லாம் சொல்ல இன்னும் அரங்கமே அதிர்ந்தது.
அந்த மேடையில் வாரிசு படத்தை தவிர்த்து விஜயை பற்றி மட்டுமே பிரபலங்கள் பேசியபோது நமக்கெல்லாம் அப்போது ஒன்னும் விளங்காமல் இருந்தது. ஆனால் இப்போது அதற்கான காரணத்தை விஜயின் அண்ணனே அவரது வாயால் கூறியுள்ளார். வாரிசு படம் தெலுங்கு இயக்குனர் வம்சியின் படம் என்பதால் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் இப்படம் வெளியாகயுள்ளது.
குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்த்தில் அம்மா, அண்ணா, தம்பி, அண்ணி, அக்கா என பல கதாபாத்திரங்கள் உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் தமிழ் படமே இல்லையாம், முழுக்க முழுக்க தெலுங்கு படம் என்று இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்றும் முற்றிலும் கலகலப்பான நல்ல குடும்ப படம் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஸ்ரீகாந்த் தனியாக பேட்டியில் வாரிசு படத்தை பற்றி பேசி ரசிகர்களிடம் குண்டை தூக்கிப்போட்டுள்ளார். ஏற்கனவே துணிவு பட ட்ரைலர் ஆக்ஷனுடன் வந்ததை பார்த்து மிரண்ட விஜய் ரசிகர்கள், வாரிசு பட ட்ரைலரில் ஆக்ஷன் காட்சிகள் ஒன்றாது இருக்குமா என்ற சந்தேகத்திலேயே உலா வருகின்றனர். தற்போது இது போதாது என முழுக்க முழுக்க இப்படம் தெலுங்கு படம் என்று அப்படத்தில் நடித்த பிரபலம் உளறியுள்ளது ரசிகர்களை குமுற வைத்துள்ளது.
தெலுங்கு படங்கள் பல படங்கள் ரசிக்கும் வகையில் இருக்காது,10 நிமிடத்திற்கு ஒரு பாட்டு, தேவையில்லாத மாஸ் வசனம், கதாநாயகிகளுக்கு குறைவில்லாத கிளாமர் காட்சிகள், லாஜிக்கில்லாத ஆக்ஷன் காட்சிகள், சிரிப்பூட்டும் வித்யாசமான நடனம் இவைகள் எல்லாம் தான் காலம் காலமாக தெலுங்கு சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படமும் இதுபோன்று இருந்தால் அவ்வளவு தான் விஜயின் கேரியரே காலி என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.