இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிதாமகன் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், பாலா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் பிதாமகன். இப்படத்தை வி ஏ துரை தயாரித்திருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோன்று ஏராளமான விருதுகளையும் வாரி குவித்தது. ஆனால் தயாரிப்பாளரான வி ஏ துரைக்கு இப்படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்கவில்லை. இதனால் பாலா அவருக்கு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி தருகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.
அதனால் பத்து லட்சம் ரூபாயை அட்வான்ஸாக வி ஏ துரை, பாலாவுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் பல வருடங்கள் கடந்தும் பாலா அவருக்கு படத்தை இயக்கிக் கொடுக்கவில்லை. அதனால் முன் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டும் அவர் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
இதனால் அந்த தயாரிப்பாளருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் தற்போது பழங்குடி என்ற ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் பாலாவின் அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்.
ஆனால் அங்கு பாலாவின் உதவியாளர்கள் அவரை வெளியே துரத்தி விட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அவர் அந்த அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கேள்விப்பட்ட காவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் வி ஏ துரையிடம் பேசி சமரசம் செய்திருக்கின்றனர். அதன் பிறகு அவர் பாலாவின் அலுவலகத்தை விட்டு சென்றிருக்கிறார். தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரை பாலா நம்ப வைத்து ஏமாற்றியது தற்போது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.