நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடிக்க உள்ள தனுஷ்50 , வெற்றிமாறனின் வடசென்னை 2, பாலிவுட் படம், தெலுங்கு படம் என இவர் கையில் பல படங்கள் உள்ளது.
அந்த வகையில் தனது தலையில் மொட்டை போட்டுக் கொண்டு தனுஷ் தனது 50வது படத்துக்கான படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். தனுஷ் இந்த படத்தை அவரே இயக்க உள்ள நிலையில், வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற பிரபலங்களின் தேர்வுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி பாகம் 1, பாகம் 2 படங்களில் நடித்த நடிகை அமலாபால் மீண்டும் தனுஷுடன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்களும் அவ்வப்போது அடிப்பட்டு வருகிறது. இதனிடையே இப்படத்தில் முக்கிய வில்லனாக பிரபல இசையமைப்பாளரிடம் தனுஷ் நடிக்க கூறி கேட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது எந்த படம் வந்தாலும், அப்படங்களில் நடிக்கும் வில்லன்களுக்கு அதிக வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு ஹீரோக்களை காட்டிலும் வில்லன்களை மிகவும் தெளிவாக பல இயக்குனர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தனுஷும் தனது தனுஷ்50 படத்தில் பிரபல கானா புகழ் இசையமைப்பாளர் தேவாவிடம் வில்லனாக நடிக்க கூறி கேட்டுள்ளார்.
ஆனால் தான் வில்லனாக நடிக்க முடியாது என தேவா தனுஷிடம் கூறிவிட்டாராம். அதற்கான காரணம், இயல்பாகாவே இசையமைப்பாளர் தேவா யார் மனதையும் புண்படுத்தாதவர். யாரையும் தரைக்குறைவாகவும் பேசாதவர். இதனிடையே தனுஷ் 50 படத்தில் வில்லனாக நடித்தால் தனது இயல்பான பண்புக்கு சரி வராது என கூறி இப்படத்தின் வாய்ப்பை தேவா மறுத்துள்ளார்.
காசுக்காகவும், வாய்ப்புக்காகவும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராகும் பிரபலங்களுக்கு மத்தியில், இசையமைப்பாளர் தேவா மார்க்கெட்டில்லாத நிலையிலும் தனது குணத்தை மீறிய கதாபாத்திரத்தில் நடிக்காமல் கைவிட்டது ஆச்சரியமாக தான் உள்ளது. அண்மையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நெஞ்சமே, நெஞ்சமே பாடலை பாடி ரசிகர்களை நெகிழ வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.