தமிழ் சினிமாவில் ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இன்றுவரை இவரிடத்தை பிடிப்பதற்கு ஆளில்லை என்றே கூறலாம். இருப்பினும் நிறைய சர்ச்சைகளில் சிக்கிய இவர், 1967 ஆம் ஆண்டு எம்ஜிஆரை சுட்ட பிறகும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 9 படங்கள் நடித்தார்.
அத்தனை படங்களுமே எம் ஆர் ராதா நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே திரையரங்குகளில் தாறுமாறாக ஓடி வசூல் வேட்டை ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. ‘நடிகவேள்’ என்ற பெயருக்கு சொந்தக்காரர்.
சினிமாவில் பெரிய இடமான எம்ஜிஆரை இவர் பகைத்துக் கொண்டதால், இனிமேல் இவருடைய சினிமா கேரியர் முடிந்தது என அனைவரும் கருதினர். ஆனால் மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்த எம் ஆர் ராதா அடுத்தடுத்து வரிசையாக நிறைய படங்கள் நடித்தார். எம்ஜிஆரை சுட்ட பின், இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டில் எம் ஆர் ராதா வெளியே வந்து விட்டார்.
அரசியலிலும் சினிமாவிலும் செல்வாக்கு நிறைந்த எம்ஜிஆரை சுட்ட பின்பும் அவருடைய மவுசு திரையுலகில் குறையவில்லை. சிறை தண்டனை அனுபவித்த பிறகும், இவர் நடித்த படங்களுக்கு அவருடைய ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
தீவிர முருக பக்தர் ஆன இவர், கடைசியாக நடித்த படம் முருகரின் பக்திப் படமான ‘வேலும் மயிலும் துணை’ என்ற படம் தான். 1979 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ரா. சங்கரன் இயக்கினார். இதில் எம் ஆர் ராதா உடன் விஜயகுமார், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
மேலும் இதில் எம் ஆர் ராதா வேலாயுதம் மற்றும் தணிகாசலம் என்ற இரண்டு கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். இதில் அவருடைய மகள் ராதிகாவும் வள்ளி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்திற்குப் பிறகு எம் ஆர் ராதா வேறு எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.