இப்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஒரு நடிகராக இருக்கும் அஜித் இந்த இடத்தை அடைவதற்கு ஏராளமான கஷ்டங்களை தாண்டி தான் வந்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு ஆசை, காதல் கோட்டை போன்ற திரைப்படங்கள் தான் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த படங்களுக்கு முன்பாக அவர் அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த விஜய்யுடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் தான் விஜய், அஜித் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். அதில் விஜய் ஹீரோவாக நடிக்க அஜித் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருப்பார்.
அந்த சமயத்தில் விஜய் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்தார். அதேபோன்று அஜித்தும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் விஜய் அளவுக்கு அவர் அப்போது பிரபலமாகவில்லை. அதன் காரணமாகவே அந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய்க்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
ஆனால் அஜித்துக்கு எந்த சம்பளமும் கொடுக்கவில்லையாம். அதற்கு பதிலாக அஜித் தன்னுடைய மருத்துவ செலவு மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு கூறினாராம். இப்படி ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் அவர் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்தின் ஆசை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
அதைத்தொடர்ந்து வெளியான காதல் கோட்டை உட்பட பல திரைப்படங்கள் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. இவ்வாறு ஆரம்பத்தில் சம்பளம் கூட வாங்காமல் நடித்த அஜித் இன்று 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது.
அதுவும் விஜய்யின் வாரிசுடன் இந்த படம் மோத இருப்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் வாரிசை விட துணிவு திரைப்படம் தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த பொங்கல் ரேஸில் எந்த படம் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.