10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் செல்லும் கௌதம் மேனன்.. வாரிசு நடிகருடன் தயாராகும் கூட்டணி

காதல் கதைகளை தனக்கே உரிய பாணியில் கொடுத்து வரும் கௌதம் மேனன் தற்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்திலும் கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். கடைசியாக அவர் 2012 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை ஹிந்தியில் இயக்கியிருந்தார். ஆனால் தமிழ் அளவுக்கு அப்படம் ஹிந்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்த கௌதம் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் பக்கம் செல்கிறார்.

அதுவும் இப்படம் வடநாட்டு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. இதற்கான திரைக்கதையை ஹிந்தி எழுத்தாளர் அகமது எழுதியுள்ளார். அந்த ஸ்கிரிப்ட்டை கேட்பதற்காக கௌதம் மேனன் இப்போது மும்பைக்கு பறந்திருக்கிறாராம். இதில் மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது.

அதாவது இந்த திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீப காலமாக இந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல் மும்பையில் தான் இருக்கிறார். அந்த அளவுக்கு அவரை தேடி ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த இரண்டு டாப் ஹீரோக்களும் இணைய இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு சில காலங்கள் ஆகும். ஏனென்றால் பல வருடங்களாக இழுபறியில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வேலைகள் தற்போது ஒரு வழியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு 2 திரைப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு தான் அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்த இருக்கிறார். அதற்கு இடைப்பட்ட வேலையில் ஸ்கிரிப்ட் தொடர்பான வேலைகள் அனைத்தும் முடிந்துவிடுமாம். அந்த வகையில் மீண்டும் ஹிந்தி திரைப்படத்தை இயக்கும் கௌதம் மேனனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.