கோலிவுட்டில் தொடர்ந்து 50 படங்களை இயக்கிய பெருமைக்குரிய இந்த இயக்குனரின் பெயரை சொன்னவுடன், கொங்கு பாஷையில் நக்கணும் நையாண்டிமாக சமகால அரசியலை கிண்டலும் கேலியும் செய்யக்கூடிய வசனங்கள் தான் நினைவுக்கு வரும். எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதை தனது படங்களில் வெளிப்படுத்துவதில்லை.
ஆனால் வேறு சிலரோ தன்னுடைய படங்களில் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்து கொள்வர். இதில் இரண்டாவது ரகம் தான் இயக்குனர் மணிவண்ணன். இவரது படங்களை பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவருக்கான அரசியல் என உறுதியுடன் இருந்தார்.
அது தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனும் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவிற்கு கிழக்கே போகும் ரயில் பற்றி எழுதிய விமர்சன கடிதம் வாயிலாக அவருடைய அறிமுகத்தை பெற்று அதன் பிறகு அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார்.
இயக்குனர் மணிவண்ணன் இதுவரை மொத்தம் 50 படங்கள் இயக்கியுள்ளார். இதில் 34 படங்கள் சூப்பர் ஹிட் ஆக கொடுத்திருக்கிறார். பல வெற்றி படங்களில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் மணிவண்ணனுக்கு கரெக்டாக பொருந்தக்கூடியவர் சத்யராஜ் மட்டுமே. இவர்கள் கூட்டணியில் 15 படங்கள் வந்திருக்கின்றன. இதிலும் பல படங்கள் வெற்றியடைந்தவை.
1986-ம் ஆண்டு தீபாவளி நாளில் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, ’பாலைவன ரோஜாக்கள்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. இரண்டிலும் ஹீரோ சத்யராஜ்தான். அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு முதல் அமைதிப்படை வரை 12 படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன.
முக்கியமாக ஒரே ஒரு படம் அமைதிப்படை போதும் இவர்கள் கூட்டணிக்கு சான்று. அதுமட்டுமல்ல இவர் இயக்கிய 50 படங்களும் வேறு வேறு கோணத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும். மணிவண்ணன் கதை எழுதுவதிலும் வல்லவர். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள் போன்ற படங்களுக்கு இவர்தான் கதை எழுதியுள்ளார்.