தற்போது திரையுலகில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி தங்கள் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கோலாகலமாக நடத்தி முடித்தனர்.
அந்த திருமண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட படு சீக்ரெட்டாக வைக்கப்பட்டது. பல பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வை பிரபல ஒடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தங்கள் தளத்தில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தது. ஆனால் திருமணம் முடிந்து பல மாதங்கள் கடந்த பின்னும் அந்த வீடியோ இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் கௌதம் மேனன் நயன்தாராவின் திருமண விவகாரம் குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதாவது நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கி இருந்ததாக தகவல்கள் வெளியானது. அந்த செய்திகளுக்கு தற்போது அவர் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, நயன்தாரா மற்றும் விக்கியின் திருமண நிகழ்ச்சிகளை நான் இயக்கவில்லை. அப்படி ஒரு செய்தி பரவியது பெரும் வதந்தி தான். நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணங்களையும், அவர் சிறு வயது முதல் கடந்து வந்த பாதைகளையும் தான் நான் ஆவணப்படமாக இயக்கியிருக்கிறேன்.
அந்த ஆவண படம் தான் நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த ஆவண படத்திற்கு “Nayanthara beyond the fairytale” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது விசித்திரத்திற்கு அப்பாற்பட்ட நயன்தாரா என்பதுதான் அதன் பொருள்.
இந்த ஆவண திரைப்படம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் புதுமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது பல நாள் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாகவே நயன்தாராவின் திருமண வைபவத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் இந்த ஆவண படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.