Ilayarajas Daughter Bhavadharani’s cinematic journey: பிரபல பின்னணி பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று மாலை உயிரிழந்த சம்பவம் திரை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவதாரணியை சிகிச்சைக்காக இலங்கை கொண்டு சென்று, அங்கு ஆயுர்வேத முறைப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெறும் 47 வயதான பவதாரணிக்கு இவ்வளவு சீக்கிரம் சாவு வந்திருக்க கூடாது என திரை பிரபலங்களும் ரசிகர்களும் ஆதங்கப்படுகின்றனர். இப்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் பவதாரணி பற்றிய பேச்சு தான். அதிலும் அவர் கடந்து வந்த சினிமா பயணத்தை பலரும் ஆர்வத்துடன் அறிந்து கொள்கின்றனர்.
இவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். அது மட்டுமல்ல 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் அவருடைய தந்தை இசைஞானி இளையராஜா மற்றும் சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் படங்களில் மட்டுமே பாடியுள்ளார். இவரது குரல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இவரின் குரலின் தனித்துவமே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டியது.
பவதாரணியின் சினிமா பயணம்
இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடலை பாடியதன் மூலம் பாடகியாக பவதாரணி அறிமுகமானார். அதன் பின் பாரதி படத்தில் இவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்பு ராமன் அப்துல்லா படத்தில் ‘என் வீட்டு ஜன்னல்’ என்ற பாடலையும் பாடி செம ஃபேமஸானார்.
பின் ரேவதி இயக்கத்தில் சோபனா நடித்த ‘மித்ர் மை பிரண்ட்’படத்திற்கு முதன் முதலாக இசையமைத்து இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அபிஷேக் பச்சன் மற்றும் சல்மான் கான் நடித்த ‘ஃபிர் மிலேங்கே’ படத்திற்கும் பவதாரணி தான் இசையமைத்துள்ளார்.
இவர் அழகி படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் படு பேமஸ் ஆனது. இது மட்டுமல்ல உல்லாசம் படத்தில் ‘முத்தே முத்தம்மா’, தனுஷின் ‘ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி’ போன்றவை எல்லாம் இவர் குரலில் வெளியாகி ஹிட்டடித்த பாடல்கள். பவதாரணி வேண்டுமானால் மறைந்திருக்கலாம், ஆனால் அவரது குரலில் பாடிய பாடல்கள் ஆண்டாண்டு காலம் வாழும் என்று அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தங்களை தாங்கனே தேற்றிக் கொள்கின்றனர்.