Premam – Alphonse Puthren – cheran : மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் பிரேமம். இந்தப் படம் மலையாள சினிமாவை தாண்டி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் கரு மற்றும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் தான்.
ஆனால் பிரேமம் படம் வெளியான போது சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் கதையில் இருந்து உருவானதாக சர்ச்சை எழுந்தது. தன் வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை வைத்து சேரன் ஆட்டோகிராப் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனாலும் ஆட்டோகிராப் படத்தின் தழுவல் தான் பிரேமம் என்று தெரிந்தும் சேரன் இதுபற்றி எதுவுமே பேசாமல் இருந்தார். சேரனின் அனுமதியின்றி ஆட்டோகிராப் கதையை அல்போன்ஸ் புத்திரன் எடுத்ததால் வழக்கு தொடரவில்லையா என பலரும் கேட்க தொடங்கியிருந்தனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சேரன் இதுகுறித்து பேசி இருக்கிறார். அதாவது பாலிவுட்டில் உள்ள படங்களை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி தான் இங்கு படம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்ம படத்தைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி பக்கத்து மாநிலத்தில் படம் எடுத்தால் இதை நினைத்து பெருமை தான் பட வேண்டும்.
இதில் பொறாமை கொள்வதற்கு ஒன்றுமே இடமில்லை என்று சேரன் பெருந்தன்மையாக பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. சேரன் படங்கள் போலவே அவரது எண்ணமும் இவ்வளவு முதிர்ச்சியாக, தெளிவாக இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.