பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் அகிலன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் மிரட்டிய நிலையில் தற்போது படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் படம் பற்றிய தங்கள் கருத்துக்களை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அதில் படம் பார்த்த அனைவரையும் கவர்ந்த ஒரே விஷயம் ஜெயம் ரவியின் நடிப்பு தான்.

அவரின் முரட்டுத்தனமான தோற்றமும், அசத்தல் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் பக்கா ஆக்சன் படமாக ஹார்பர் க்ரைமை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் பரபரப்பான திரைக்கதைக்காக இயக்குனருக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. நிச்சயம் இப்படத்திற்காக அவர் பல ஆராய்ச்சிகளை செய்திருக்க வேண்டும்.

அந்த அளவிற்கு ஹார்பர் குற்றங்களை இப்படம் தெள்ளத் தெளிவாக முன் வைக்கிறது. மேலும் ஒரு வலுவான சமூக செய்தியை இப்படம் உணர்த்தி இருப்பதும் சிறப்பு. ஆனால் கிளைமாக்ஸ் காட்சி இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பதும் சில ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அதிலும் வில்லனுக்கும் ஜெயம் ரவிக்கும் நடக்கும் சண்டை காட்சிகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அந்த வகையில் அவர்தான் இப்படத்தை தனி ஒருவனாக தாங்கிப் பிடித்திருக்கிறார். ஆக மொத்தம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் இனிவரும் நாட்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
