ஒற்றை பாடல் வரியால் ரஜினியை சீண்டிய சத்யராஜ்.. 38 ஆண்டுகள் ஆகியும் முணுமுணுக்க வைக்கும் பாடல்

Kollywood Actors Rajini and sathyaraj starred the film Mr. Bharath completed 38 years of its release: என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் என்று தாய்க்காக தந்தையுடன் போராடிய பாசத் தனயனின் ஆக்ரோஷத்தை விளக்கியது 1986 இல் வெளிவந்த மிஸ்டர் பாரத் திரைப்படம். 1978 இல் ஹிந்தியில் வெளிவந்த திரிசூல் என்பதன் தமிழாக்கமே  மிஸ்டர் பாரத்.

எஸ் பி முத்துராமன் இயக்கிய மிஸ்டர் பாரத் படத்தில் திரைக்கதை மற்றும் வசனத்தை விசு எடுத்துக் கொண்டார். ரஜினியை விட நான்கு வயது குறைவாக இருந்த சத்யராஜ் சூப்பர் ஸ்டாருக்கு தந்தையாக நடித்திருப்பார். இவர்களைத் தவிர ரகுவரன், வடிவுக்கரசி, எஸ் வி சேகர், விஜி, விசு, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தனர்.

கட்டிட இன்ஜினியர் ஆன சத்தியராஜ் இளவயதில் கிராமத்தில் ரஜினியின் அன்னையை ஏமாற்றிவிட்டு நகரத்திற்கு வந்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுகிறார். ரஜினியின் தாய் இறக்கும்போது தந்தையை பழிவாங்க வேண்டும் என சத்தியம் வாங்கி செல்கிறார்.

தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்திற்காக  தற்போது நகரத்தில் வணிக சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்ட தந்தையை அவரது வழியிலே போய் பல  தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்து அவருக்கு எதிராக வேகமாக முன்னேறுகிறார். இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஜெயிக்கும் போது என்னம்மா கண்ணு சௌக்கியமா என்ற டிரேடு மார்க் வசனத்தை கூறும்போது  திரையரங்கும் ரசிகர்களின் ஆரவாரத்தில் குலுங்கியது எனலாம்.

இளையராஜா இசையில் எஸ்பிபி மற்றும் மலேசியா வாசுதேவன் பாடிய என்னம்மா கண்ணு  எவர்கிரீன் சாங்காகும். படத்தின் மொத்த கதையையும் சவாலையும் ஒரே பாடலில் விளக்கி இருந்தனர். “வெள்ளி பணம் என்னிடத்தில் கொட்டி கிடக்கு! வெட்டிப்பயல்  உன்னிடத்தில் என்ன இருக்கு!”,”சத்தியத்தை நம்பி லாபம் இல்லை தம்பி, நிச்சயமா நீதி வெல்லும் ஒரு தேதி” என மாற்றி மாற்றி பாட்டிலேயே  சீண்டிக்கொண்டனர் சத்யராஜும் ரஜினியும். பாடலின் வரிகளும் இசையும் எப்போது கேட்டாலும் முணுமுணுக்க வைக்கும்.

ஹோட்டல் காரராக நடித்திருந்த கவுண்டமணி மேனேஜரிடம் ஏன் இங்கிலீஷ் கத்துக்கோங்க என்று கூறி  ஐ கோ, ஐ சென்ட், ஐ க்ளோஸ், யூ ஓபன் என்று இங்கிலீஷில் தாறுமாறு தக்காளி ஆக்கி இருப்பார்.  இப்படம் வெளிவந்து 38 ஆண்டுகளை நிறைவு செய்திருந்த நிலையில் இப்போது பார்த்தாலும்  முதல் முறை பார்ப்பது போல் ரசிக்க வைத்து விடுகிறது மிஸ்டர் பாரத்.