ராகவா லாரன்ஸ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் பொது வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் நிறைய உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மை பிரதிபலிப்பான பார்வதி அம்மாளுக்கு லாரன்ஸ் உதவினார்.
அதுமட்டுமின்றி தனது அறக்கட்டளை மூலம் நிறைய குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார். சமீபத்தில் தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை அளிக்க வேண்டாம் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதாவது தற்போது தன் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.
இதனால் அவர்களுக்கு உதவும் அளவிற்கு என்னிடம் பணம் உள்ளது. உங்களது ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அதாவது ஒரு சிறுவனின் காலில் விழுந்து லாரன்ஸ் ஆசி வாங்குவது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தன்னைவிட வயதில் மிகவும் குறைவான ஒரு சின்ன பையன் காலில் லாரன்ஸ் ஏன் விழுகிறார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.
லாரன்ஸ், இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன், அவர்களின் காலில் விழுந்து தான் நான் என் சேவையை செய்வேன் என கூறியுள்ளார். அதாவது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு வந்த பெற்றோர் என் காலில் விழுந்து அழுதனர்.
ஒரு அப்பா தன் மகன் முன்னால் எப்போதும் ஹீரோவாக காட்டிக்கொள்ள தான் நினைப்பார். ஆனால் அந்த சமயத்தில் அவர் என் காலில் விழுந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருடைய மகன் அழுதார். அதுமட்டுமின்றி சில குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்பு அவர்களது பெற்றோர் என் காலில் வந்து போடுவார்கள்.

குழந்தைகள் என்பது தெய்வம் போல, என் காலில் வந்து வைப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. சில ஊர்களுக்கு செல்லும்போது என்னுடைய அம்மா வயது உடையவர்கள் என் காலில் விழுவார்கள். நாம் ஒருவருக்கு பணத்தை தான் கொடுக்கிறோம். அவர்கள் நமக்கு புண்ணியத்தை கொடுக்கிறார்கள். அதனால் இனி ஒருவரின் காலில் விழுந்து தான் அவர்களுக்கு உதவுவேன் என்ற முடிவை லாரன்ஸ் எடுத்துள்ளார்.