சமீப காலமாகவே விஷால், பண மோசடி வழக்கில் சிக்கி நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். அதிலும் லைக்காவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்காததால் சில தினங்களுக்கு முன்பு, அவருடைய படங்களை தியேட்டரில் அல்லது ஓடிடி-யிலோ வெளியிட உச்ச நீதிமன்றம் அதிரடியான தடை உத்தரவை பிறப்பித்தது.
அதே போன்று இப்போது விஷாலின் சண்டைக்கோழி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் லிங்குசாமியும் மோசடி வழக்கில் மாட்டிக்கொண்டு 6 மாத சிறை தண்டனையை பெற்றுள்ளார். இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதில் பல படங்களை தயாரித்து வெளியிடுகிறார்.
இந்நிலையில் 2014ஆம் ஆண்டு அவர் தயாரித்து இயக்கிய அஞ்சான் படமும், 2015 ஆம் ஆண்டு வெளியான உத்தம வில்லன் படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே 2014 ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து 1.3 கோடிகளை கடனாக பெற்றது.
இந்த தொகையை உரிய நேரத்தில் செலுத்தாததால் லிங்குசாமியின் மீது பிவிபி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்படி சென்னை உயர்நீதிமன்றம் லிங்குசாமி சம்பந்தப்பட்ட தொகைக்கு காசோலையை வழங்கும் படி உத்தரவிட்டது. ஆனால் அவை வங்கியில் போதிய பணம் இல்லாததால் திரும்ப வந்தது.
இதை அடுத்து லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கை பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையை அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதிப்படுத்தியது. அது மட்டுமல்ல கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.