Mansoor Ali Khan blamed Udhayanidhi for the failure of his movie sarakku : தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக பிரபலமானதை விட தனது சர்ச்சை பேச்சுகளால் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மன்சூர் அலிகான். புரட்சி கலைஞர் விஜயகாந்தின் தயவால் கேப்டன் பிரபாகரனில் அறிமுகமானவர் மன்சூர். உடல் மொழிகளாலும் பேச்சினாலும் வில்லத்தனத்தில் ரசிகர்களை பயமுறுத்தியவர் பின்னாளில் காமெடியிலும் கலக்க ஆரம்பித்து விட்டார்.
சமீபத்தில் இளைய தளபதி நடித்த லியோ படத்தில் குணச்சித்திர நடிகராக தோன்றி ரசிகர்களின் பேராதரவை பெற்றார். இப்படத்தின் வெற்றி விழாவின் போது திரிஷா மற்றும் மற்ற நடிகைகளை பற்றி கூறிய சர்ச்சை பேச்சுகளால் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆனார் மன்சூர் அலிகான்.
சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தும் பொருட்டு “குடி குடியை கெடுக்கும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருந்தார் மன்சூர் அலிகான். ட்ரெய்லரிலேயே அதிக வரவேற்பை பெற்றது மன்சூர் அலிகானின் சரக்கு.
சென்சருக்கு சென்ற இப்படத்திற்கு பல்வேறு வகையிலும் எதிர்ப்பு கூடியது. அம்பானி, அதானி போன்ற பெயர்களை பயன்படுத்தக்கூடாது, சிங்களவன், கூடங்குளம் போன்ற வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது என பல கூடாதுகளை சொல்லி வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர்.
ஒரு வழியாக பல தடைகளை தாண்டி ரிலீசுக்கு வந்தது சரக்கு. எதிர்பார்த்த வெற்றி அடைய முடியாமல் போன கடுப்பில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி மீட்டிங்கில் கலந்துகொண்டு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் சரக்கு படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் உதயநிதி தான் என்றும், திரையரங்குகள் கொடுக்காமல் எல்லாவற்றையும் ஆளுங்கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக சரமாரியாக தாக்கினார் மன்சூர்.
ஓடிடி யிலும் வெளியிட முடியாதபடி செய்து எனக்கு நஷ்டத்தை உண்டு பண்ணி உள்ளனர் என்று வெகுண்டார். வாரிசு அரசியல் தான் நடைபெறுகிறது என்றும், தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கின்றனர். கோடி கோடியாக பணம் சம்பாதித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர் என்றெல்லாம் ஆளும் கட்சியை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார் மன்சூர் அலிகான். தேர்தல் பிரச்சாரத்தை இப்போது இருந்தே தொடங்கி விட்டார் மன்சூர்.