தன்னுடைய அடுக்குமொழி வசனத்தால் ரசிகர்களை கவர்ந்த டி ராஜேந்தர் இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பு, இசை போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இப்படி பன்முக திறமை கொண்ட டி ராஜேந்தர் இதுவரை ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் அரசியலிலும் ஒரு கை பார்த்தார்.
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருடன் மிகவும் இணக்கமாக இருந்த டி ராஜேந்தர் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக கலைஞர் பக்கம் சென்றார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது டி ராஜேந்தர் ஒரு படம் இயக்குவது தொடர்பாக தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்திருக்கிறார். இந்த விஷயம் எம்ஜிஆரின் காதுக்கு சென்று இருக்கிறது.
அதனால் இரு தரப்பினரையும் கூப்பிட்டு விசாரித்த எம்ஜிஆர் தயாரிப்பாளரின் மேல் தவறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு அவர் டி ராஜேந்திரிடமர் தயாரிப்பாளரின் மீது தவறு இருந்தாலும் நீ எதற்காக சண்டை போடுகிறாய். படத்திற்காக கஷ்டப்பட்டு பணம் போடுபவரிடம் நாம் நல்ல பெயர் தான் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கண்டிப்புடன் பேசி இருக்கிறார்.
இது பிடிக்காத டி ராஜேந்தர் அடுத்தபடியாக எம்ஜிஆருக்கு எதிராக திரும்ப ஆரம்பித்து இருக்கிறார். எம்ஜிஆர் பஞ்சாயத்து செய்ததை மனதில் வைத்துக்கொண்டு கோபத்துடன் இருந்த டி ராஜேந்தர் உடனே கலைஞரின் திமுக கட்சியின் பக்கம் சென்றிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது. கட்சியிலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இவர் பேசும் அடுக்கு மொழி தான். கலைஞர் கருணாநிதியும் எதுகை மோனையாக பேசுவதில் கில்லாடி. இதனாலேயே டி ராஜேந்தர் கலைஞர் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து கட்சியிலும் அவர் முன்னேற ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த டி ராஜேந்தர் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் உயர்ந்தார்.
இப்படி அரசியலிலும் வெற்றி கண்ட டி ராஜேந்தர் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கலைஞரின் கட்சியை விட்டு வெளிநடப்பு செய்தார். இப்படியாக எம்ஜிஆருக்கு எதிராக கூடு விட்டு கூடு பாய்ந்த டி ராஜேந்தர் எதிர் கட்சியிலும் இருக்க முடியாமல் வெளியேறி தனி கட்சி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.