சிவாஜியை பார்த்து பயந்து நடுங்கிய நடிகர்.. 11 முறை பாத்ரூம் போன சம்பவம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிப்பில் மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்ட அவர் திரைத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவருடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்பதுதான் பல நடிகர்களின ஆசையாக இருந்தது.

ஆனால் அப்படி இணைந்து நடிப்பது பல நடிகர்களுக்கும் ஒரு சவால் தான். ஏனென்றால் நடிப்பு என்று வந்து விட்டால் சிவாஜி கேரக்டராகவே மாறிவிடுவார். அதனால் அவருக்கு இணையாக நடிப்பதற்கு பல நடிகர்களும் சற்று பதட்டப்பட தான் செய்வார்கள்.

அப்படி ஒரு நிலைமை தான் நடிகர் ராதாரவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. 1982 ஆம் ஆண்டு சிவாஜி, சுஜாதா, ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பரீட்சைக்கு நேரமாச்சு. இப்படத்தில் ராதாரவியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் அவர் மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்திருக்கிறார். ஆனாலும் சிவாஜியுடன் நடிப்பது இதுதான் முதல் முறை என்பதால் அவர் சற்று பதட்டத்துடன் இருந்துள்ளார். அந்த சமயத்தில் உதவியாளர் அவரிடம் சிவாஜி வந்துவிட்டார் நடிக்க வாங்க என்று கூறி இருக்கிறார்.

அதைக் கேட்ட உடனே ராதாரவிக்கு பயம் அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர் 11 முறை பாத்ரூமுக்கு சென்று வந்திருக்கிறார். அதன்பின் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

பொதுவாகவே ராதாரவி எதற்கும் யாருக்கும் பயப்படாதவர். அவருடைய அப்பா எம் ஆர் ராதா எப்படி தைரியமாக பேசுவாரோ அப்படித்தான் இவரும். ஆனால் சிவாஜியை பார்த்தால் மட்டும் அவருக்கு சற்று உதறல் எடுத்து விடுமாம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் அதன் பிறகு அவர் சிவாஜியுடன் இணைந்து படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.