Raghuvaran: ரகுவரனின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ரகுவரனை தமிழ் சினிமா வில்லனாக்கி அழகு பார்த்தது. வில்லனுக்கென்று ஒரு சில விதிமுறைகள் அந்த காலத்தில் இருந்தது. பார்ப்பதற்கே கொஞ்சம் பயமுறுத்தும் தோற்றத்துடன் தான் அப்போது வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வந்தார்கள்.
ஆனால் அதற்கு அப்படியே நேர் எதிராக ஹாண்ட்சம் ஹீரோவாக இருந்த ரகுவரன் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். 6 அடியை தாண்டிய உயரம், கரகரப்பான குரல், வில்லனுக்கு உண்டான மடுக்கு என பக்காவாக வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருந்தார். அதுவும் ரகுவரன் வில்லனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற தொடங்கியது.
மேலும் கடைசியாக தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரன் நடித்திருப்பார். அந்தப் படத்தில் ரகுவரன் இறந்தது போன்ற காட்சி எடுக்கப்பட்ட நிலையில் நிஜ வாழ்க்கையிலும் அதுவே அவரது கடைசி படமாக முடிந்து விட்டது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரகுவரனின் இறப்புச் செய்தி வெளியாகி கோலிவுட் சினிமாவையே அதிர்ச்சியில் தள்ளியது.
மேலும் ரகுவரனின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பதை அவரின் ரத்த சொந்தமான உடன்பிறந்த தம்பி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் உள்ள நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் மட்டும் ரகுவரன் இடம் ரிஷி ஒப்படைக்கப்படுவார். அந்த இரண்டு நாட்களும் சினிமாவில் சூட்டிங் எதுவும் ரகுவரன் வைத்துக் கொள்ள மாட்டாராம். தனது மகனுடன் அந்த நாட்களை சந்தோஷமாக செலவிட்டிருக்கிறார். அதன் பின்பு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளாராம்.
அதோடு மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் குடிக்கு மிகவும் அடிமையாகி இருந்துள்ளார். ஆனால் இறக்கும் சமயத்தில் ரகுவரன் மதுப்பழக்கத்தை சுத்தமாக விட்டு விட்டார் என அவரது தம்பி கூறியிருக்கிறார். மேலும் திடீரென ரகுவரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அப்போது முதலுதவி அளித்து மருத்துவமனைக்குச் அழைத்து சென்ற நிலையில் ரகுவரன் உயிரிழந்து விட்டதாக வேதனையுடன் அவரது தம்பி கூறியிருக்கிறார்.