சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அவருடைய நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா படம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்நிலையில் புதிய பொலிவுடன் பாபா படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
அதுவும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி பாபா ரீ ரிலீஸ் ஆனது. இப்போது சூப்பர் ஸ்டாரின் மற்றொரு படத்தையும் ரீ ரிலீஸ் செய்யும் முடிவில் தயாரிப்பாளர் உள்ளார். ரஜினி தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்திலும் ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர இரண்டு மூன்று இயக்குனர்களை ரஜினி லைன் அப்பில் வைத்துள்ளார்.
இந்த சூழலில் பா ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி. இந்த படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ரஜினி மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இயக்குனர் கிளைமாக்ஸில் சொதப்பிவிட்டார். ஆரம்பத்திலேயே இந்த க்ளைமாக்ஸில் ரஜினிக்கு உடன்பாடு இல்லையாம்.
ஆனால் இயக்குனரின் விருப்பத்தின் காரணமாக ரஜினி இதற்கு சம்மதித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி எஸ் தாணு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது பாபா படத்தை போல் கபாலி படத்தையும் ரீ ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளதாக கூறியிருந்தார். மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றி அமைக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
இந்த செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும்இன்றி விரைவில் இதற்கான பணியும் தொடங்க இருக்கிறதாம். பல வருடங்கள் கழித்து புதுப்பொலிவுடன் பாபா படத்தை கண்டு ரசித்த ரஜினி ரசிகர்களுக்கு கபாலி படத்தின் ரீ ரிலீஸ் செய்தி கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது.