நான் உயிருடன் இருக்கிறேன், உருக்கமாக பேசிய சமந்தா.. பதறிப் போய் ஆறுதல் கூறும் திரையுலகம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சில தினங்களுக்கு முன்பு தனக்கு மையோசிடிஸ் என்னும் அரிய வகை உடல் பிரச்சினை இருப்பதாக தெரிவித்திருந்தார். மிகவும் மோசமான நாட்களை அனுபவித்து வருவதாகவும் அவர் மனம் உடைந்து ஒரு பதிவை போட்டிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன பிரபலங்கள் பலரும் சமந்தா விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வந்தனர். மேலும் ரசிகர்களும் தைரியமாக இந்த பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் சமந்தா நீண்ட மாதங்களுக்கு பிறகு மீடியாவுக்கு வந்திருக்கிறார்.

தற்போது சமந்தா நடிப்பில் யசோதா திரைப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வரும் நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் சூழலில் சமந்தா தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு சமந்தாவை இப்படி எலும்பும், தோலுமாக பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து தான் போயிருக்கின்றனர். கருப்பு நிற உடையில் கண்ணில் கண்ணாடி போட்டுக்கொண்டு மிகவும் சோர்வுடன் பேசும் சமந்தாவுக்கு பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

யசோதா திரைப்படத்தைப் பற்றி கூறிய சமந்தா தன்னுடைய உடல்நல பிரச்சினை குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் நான் ட்விட்டரில் தெரிவித்தது போன்று எனக்கு மோசமான நாட்களும், நல்ல நாட்களும் இருந்தது. ஆனாலும் நான் உயிருடன் தான் இருக்கிறேன். இந்த மூன்று மாதங்களும் மருந்து, மாத்திரைகள், டிரிப்ஸ் என்று நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன்.

என்னுடைய உடல் நிலையை பற்றி என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேன். அதே சமயம் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னை பலவீனப்படுத்தி விடுமோ என்றும் பயந்தேன் என அவர் கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதை பார்த்த பலரும் நீங்கள் ஒரு இரும்பு பெண்மணி, இதிலிருந்து உங்களால் எளிதாக வெளிவர முடியும் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.