Vijay Devarakonda-Rashmika-Samatha: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ப்ரமோஷன்கள் பல வாரங்களாகவே தடபுடலாக நடந்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவின் காதல் பற்றிய செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஷ்மிகாவும் இவரும் பல வருடங்களாக டேட்டிங் செய்து வருவது ஊரறிந்த விஷயம் தான். சமீபத்தில் கூட மாலத்தீவில் இவர்கள் இருவரும் சுற்றி திரிந்தது பற்றிய செய்திகளும் வெளிவந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே அது குறித்து இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
இருப்பினும் இந்த ஜோடியின் காதல் உண்மை தான் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் குஷி படத்தில் நடிக்கும் போது சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும் விரைவில் இந்த ஜோடி தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு செய்தி பூதாகரமாக வெடித்தது.
அதற்கு ஏற்றார் போல் குஷி பட ப்ரமோஷன் மேடையில் விஜய் தேவரகொண்டா சமந்தா பற்றி உருக்கமாக பகிர்ந்த விஷயங்களும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி ராஷ்மிகாவா, சமந்தாவா என்று ரசிகர்கள் குழம்பி இருக்கும் நிலையில் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள ஒரு ரகசியம் தான் இப்போது வைரலாகி வருகிறது.
அதாவது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, நிறைய நடக்கிறது, இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது, விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த போட்டோவில் ஆண், பெண் இருவரின் கைகள் இணைந்தபடி இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் இது நிச்சயம் திருமண அறிவிப்பாகத்தான் இருக்கும் என்றும் கல்யாண பொண்ணு ராஷ்மிகா தான் என்றும் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜய் தேவரகொண்டா இன்று மாலை ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். அதில் இவருடைய காதலி யார் என்ற ரகசியமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.