நடிகர் திலகத்துக்கே காய்ச்சல் வர வைத்த கேரக்டர்.. நடிக்க பயந்து பதறிய சிவாஜி

Actor Sivaji: சிம்ம குரல், மிரள வைக்கும் நடிப்பு, நவரசங்களையும் காண்பிக்கும் முகம் என நடிப்பிற்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்தவர் தான் நடிகர் திலகம். இன்றைய தலைமுறை நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. எந்த கேரக்டராக இருந்தாலும் தத்ரூபமாக நடிப்பது தான் இவருடைய சிறப்பு.

அப்படிப்பட்ட சிவாஜியே ஒரு கேரக்டரில் நடிக்க பயந்து போன சம்பவமும் இருக்கிறது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் மறுநாள் நடக்க வேண்டிய ஒரு நாடகத்தை நினைத்து சிவாஜிக்கு காய்ச்சலே வந்திருக்கிறது. அந்த ஆச்சர்யமான சம்பவத்தை பற்றி இங்கு காண்போம்.

ஒருமுறை நடிகர் திலகம் பழம்பெரும் இயக்குனர் திரிலோகச்சந்தரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரொம்பவும் பதட்டமாகவே இருந்திருக்கிறார். எதார்த்தமாக அங்கு வந்த ஏவிஎம் சரவணன் சிவாஜியை பார்த்து ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் உடம்பு சரியில்லையா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சிவாஜி எனக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று கூறி சோர்வாக அமர்ந்திருக்கிறார். என்ன ஏது என்று விசாரித்த போது மறுநாள் நடக்க இருக்கும் நாடகத்தில் அவர் ஐயர் வேடத்தில் நடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நினைத்து தான் அவர் பதட்டத்தில் இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே இந்த காய்ச்சலும் வந்திருக்கிறது.

உடனே ஏவிஎம் சரவணன் இதற்கு எதற்கு இவ்வளவு பதட்டப்பட வேண்டும், பாஷை மட்டும்தானே மாறப்போகிறது என்று அசால்டாக கூறியிருக்கிறார். உடனே சிவாஜி அது சாதாரண கேரக்டர் கிடையாது, பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற கதாபாத்திரம். பொதுவாக ஐயர் பாஷை பேசினால் மட்டும் கதாபாத்திரம் முழுமை அடையாது. அதற்கு ஏற்ற மாதிரி உடல் மொழியும் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மேலும் அதனால் தான் தனக்கு இப்போது பதட்டமும் காய்ச்சலும் வந்துவிட்டது எனவும் கூறியிருக்கிறார். அப்படி சிவாஜி நடிக்க பயந்த கேரக்டர் தான் வியட்நாம் வீடு நாடகத்தில் இடம்பெற்ற பிரஸ்டீஜ் பத்மநாபன் கதாபாத்திரம். நல்ல வரவேற்பு பெற்ற அந்த நாடகம் பின்னாளில் திரைப்படமாகவும் வெளியானது. அதில் சிவாஜியின் மிரட்டல் நடிப்பும், உடல் மொழியும், வசன உச்சரிப்பும் இன்று வரை பிரம்மிக்க வைக்கும்.

அது மட்டும் இன்றி சிறந்த படத்திற்கான தமிழக விருதையும் அப்படம் தட்டிச் சென்றது. இதற்கு முக்கிய காரணம் சிவாஜியின் நடிப்பு தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருப்பார் நடிகர் திலகம். ஆனால் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு முன் அவருக்கு காய்ச்சல் வந்தது என்ற விஷயம் பலருக்கும் ஆச்சரியமாகவும், புதிய தகவலாகவும் இருக்கிறது.