நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் மார்க்கண்டேய நடிகர் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். சில காலங்கள் வரை படங்களில் நடித்து வந்த இவர் இப்போது நடிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தன் மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டு தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்த சிவகுமார் பல வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த பத்ரகாளி, ஆட்டுக்கார அலமேலு, அன்னக்கிளி, ரோஜாப்பூ ரவிக்கைக்காரி போன்ற திரைப்படங்கள் 175 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.
இப்படி திரையுலகில் வெற்றி கதாநாயகனாக வலம் வந்த இவருக்கு கடைசி வரை வெறும் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதுதான் அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளமும் கூட. இது பலருக்கும் நிச்சயமாக ஆச்சரியத்தை தான் கொடுக்கும். ஏனென்றால் இப்போதுள்ள நடிகர்கள் ஒரு திரைப்படம் வெற்றி அடைந்து விட்டாலே தங்களுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விடுகின்றனர்.
அதிலும் இப்போது உள்ள முன்னணி நடிகர்கள், படம் ஓடுகிறதோ, இல்லையோ சம்பளம் மட்டும் பல கோடி வேண்டும் என்று தயாரிப்பாளர்களை நச்சரித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்தும் சிவக்குமார் தன்னுடைய சம்பளம் பற்றி தயாரிப்பாளரிடம் எதுவுமே கேட்க மாட்டாராம்.
தனக்கான சம்பளம் என்ன கொடுக்கப்படுகிறதோ அதை மன நிறைவுடன் வாங்கிக் கொள்வாராம். இதைப்பற்றி அவரிடம் பலரும் கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் நான் ஒருவன் மட்டும் இந்த படத்தில் நடிக்கவில்லை. பலரின் உழைப்பு இதில் இருக்கிறது. அதனால் இந்த வெற்றியில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று கூறினாராம்.
அது மட்டுமல்லாமல் படம் வெற்றி பெற்று விட்டதே என்று எனக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுப்பது நியாயம் இல்லை. எனக்கு தயாரிப்பாளர் கொடுக்கும் இந்த சம்பளமே நிறைவாகத்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அந்த வகையில் சிவக்குமார் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாகவே இருந்திருக்கிறார்.