விக்ரமை கேவலமாக பேசிய சொந்த பந்தங்கள்.. விபத்தில் சிக்கிய சியானுக்கு பட வாய்ப்பை கொடுத்து தூக்கி விட்ட நடிகர்

சினிமாவில் நுழையும் போது விக்ரம் கொஞ்ச நஞ்ச கஷ்டத்தை அனுபவிக்கவில்லை. அவ்வளவு ஏச்சுப் பேச்சுகளையும் கேவலங்களையும் வாங்கி தோளில் போட்டுக் கொண்டு சுமந்து இருக்கிறார். எதுவுமே சாதாரணமாக கிடைத்து விடாது. அப்படி தான் விக்ரமின் வெற்றிக்குப் பின்னால் பல போராட்டங்கள் ஒளிந்திருக்கிறது. அதிலும் சினிமாவில் இருக்கும் அவருடைய உறவினர்களே ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பி அவருக்கு பட வாய்ப்பை வரவிடாமல் செய்திருக்கின்றனர்.

ஆனால் ‘என்னை போல் தான் அவரும்’ என்று விக்ரமுக்கு அஜித்குமார் உதவி இருக்கும் சம்பவத்தை தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு கெத்துக்காட்டுகின்றனர். தற்போது விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து மிரட்டுகிறார். இப்போது டாப் நடிகராக இருக்கும் விக்ரம் தன்னுடைய கேரியரின் ஆரம்பத்தில் நடித்த படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்தது. அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க விரும்பாத விக்ரம் பிற நடிகர்களுக்கு டப்பிங் செய்து கொண்டிருந்தார்.

பிறகு பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்த பிறகுதான் விக்ரமின் சினிமா கேரியரே வேற லெவலுக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் காசி, பிதாமகன் போன்ற படங்கள் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெமினி, தூள் என கமர்ஷியல் படங்களிலும் நடித்து டாப் நடிகர் லிஸ்டில் இடம்பெற்றார்.

நடிகர் பிரசாந்த் விக்ரமின் உறவினர் என்பது பலருக்கும் தெரியும். அதாவது விக்ரமின் தாயும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜனும் உடன் பிறந்தவர்கள். ஆகையால் விக்ரமின் மாமன் மகன்தான் பிரசாந்த். இப்படி இருக்கும் போது விக்ரம் சினிமாவில் நுழையும் போது அவருக்கு மாமனான தியாகராஜன் எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாட்டியும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம்.

விக்ரம் சினிமாவில் நுழையும் போது அவரை பற்றி ரொம்ப கேவலமாக பேசியிருக்கின்றனர். இதைப் பற்றி விக்ரமே பாலாவிடமும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல சினிமாவில் விக்ரம் போராடிக் கொண்டிருக்கும்போது ஒரு முறை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிவிட்டார். விக்ரமால் நடமாடவே முடியாது. சொல்லப்போனால் எழுந்து நிற்க கூட அவரால் முடியாது என பிரசாந்த்தும் அவரது தரப்பினரும் திரையுலகில் ஒரு வதந்தியை கிளப்பி விட்டனர். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் போனது.

ஆனால் 1997 ஆம் ஆண்டு வெளியான உல்லாசம் படத்தில் கதையில் இரண்டு ஹீரோக்கள் தேவைப்பட்டனர். முதலில் அஜித்தை லாக் செய்த பட குழு, அடுத்ததாக விக்ரமை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து அஜித்திடமும் ஆலோசனை கேட்டபோது ‘அவரும் என்னை போல் படிப்படியாக கஷ்டப்பட்டு முன்னேறியவர். அவரையே நடிக்க வையுங்கள். படத்தில் அவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸையும் மிகைப்படுத்துங்கள்’ என விக்ரமுக்கு உதவி செய்து தூக்கி விட்டிருக்கிறார். உறவினர்களே பொறாமைப்படும் காலகட்டத்தில் அஜித் தனக்கு நிகரான நடிகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருப்பது பாராட்டக்கூடிய விஷயம்.