ஆடியோ லான்ச்சுக்கு வர மறுத்த நடிகை.. தகாத வார்த்தையில் திட்டிய கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த கஞ்சா கருப்பு பிதாமகன், சண்டைக்கோழி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த சில வருடங்களாக அதிக அளவில் திரைப்படங்களில் தென்படுவதில்லை.

பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இவரின் முன் கோபம் காரணமாக சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓங்காரம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் மோகன் ஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கஞ்சா கருப்பு படம் வெற்றி அடையும் என்று பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இவர் அப்பாடத்தின் ஹீரோயினை தகாத வார்த்தையில் திட்டி பேசினார். இப்போதெல்லாம் ஹீரோயின்கள் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டுமென்றால் அதிக அளவில் பணம் கேட்கின்றனர். அதை குறிப்பிட்டு பேசிய கஞ்சா கருப்பு இந்த பட இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஹீரோயின் ஒரு லட்சம் கேட்டதாக கூறினார்.

அதை கொடுக்க முடியாத காரணத்தினால் இந்த விழாவிற்கு அவர் வரவில்லை என்று கூறிய கஞ்சா கருப்பு சில தகாத வார்த்தைகளையும் குறிப்பிட்டு பேசினார். ஒருவேளை அவர் இந்த விழாவிற்கு வந்திருந்தால் நிறைய பட வாய்ப்பு கிடைத்திருக்கும் அதை அவர் தவற விட்டு விட்டார் என்று கூறினார்.

அவருடைய இந்த மோசமான பேச்சு தற்போது பல எதிர்ப்புகளை கிளப்பி இருக்கிறது. ஒரு பொது இடத்தில் இப்படித்தான் ஒரு பெண்ணை தகாத வார்த்தை சொல்லி பேசுவீர்களா என்று பலரும் அவரை திட்டி தீர்க்கின்றனர்.