17 வயதிலேயே நடிகர் திலகத்திற்கு கிடைத்த பெயர்.. சிவாஜியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

நடிப்பின் சக்கரவர்த்தியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, உணர்ச்சி பூர்வமான நடிப்பு ஆகியவற்றின் மூலம் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றவர். சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராத காதல் ஏற்பட்டு மேடை நாடகங்களில் நடிப்பதன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். 

இதனைத் தொடர்ந்து சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பார்த்து தானும் நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் சிவாஜி மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்நிலையில் தனது 7 வது வயதில் முதல் மேடை நாடகமான ராமாயணம் என்னும் தொடரில் சீதை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

தொடர்ந்து பெண் வேடங்களில் நடித்து வந்த இவருக்கு அதன் பிறகு பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித் போன்ற பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்நிலையில் பேரறிஞர் அண்ணா எழுதிய“சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்”என்னும் நாடகத்தில் தனது 17 வது வயதில் பேரரசர் சிவாஜியாக நடித்து தந்தை பெரியாரையே மெய்சிலிர்க்க வைத்தார். 

இதனால் தந்தை பெரியார் அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து வி சி கணேசன் என்னும் பெயர் மறைந்து சிவாஜி கணேசன் என்னும் பெயர் திரைத்துறையில் நிலையாக மாறியது. இந்நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் மேடை நாடகங்களின் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் அதனைத் தொடர்ந்து 1952 இல் வெளியான பராசக்தி என்னும் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இந்நிலையில் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

சிலர் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று இவரது படங்களை பார்த்து நிறைய பேர் வியந்துள்ளனர். இவரின் நடிப்பை பார்த்து கற்றுக்கொண்டவர்கள் திரைத்துறையில் பல பேர் உள்ளனர். அந்த வகையில் இவரைப் பார்த்து கூட சென்னைக்கு நடிக்கும் ஆசையோடு வீட்டிலிருந்து ஓடி வந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.