விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோத இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது. அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கும் இந்த படத்திற்கு இப்பவே பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு பிசினஸ் ஆகும் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் விஜய் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்பட்டது குறித்து நடிகர் ஜெய் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ் உட்பட பல திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஜெய் விஜய்யுடன் இணைந்து நடிக்க ரொம்பவும் ஆசைப்பட்டு வருகிறார். பல வருடங்களுக்கு முன் வெளிவந்த பகவதி திரைப்படத்தில் இவர் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார். சொல்லப்போனால் ஜெய்யின் அறிமுக திரைப்படமே அதுதான்.
அதன் பிறகு அவர் சினிமாவில் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஆனாலும் விஜய் உடன் மீண்டும் இணையும் அந்த வாய்ப்புக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருமுறை அவர் தன்னுடைய விருப்பத்தை விஜய்யிடம் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
ஆனால் விஜய் அவரை ஹீரோவாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்து என்று கூறி ஜெய்யின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் தளபதியுடன் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன் என்றும், அதற்கான வாய்ப்பு வரும் வரை காத்திருப்பேன் என்றும் ஜெய் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பலநாள் கனவு நனவாகுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.