கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி நடிப்பு, நடனம் என இரண்டிலுமே பட்டையை கிளப்ப கூடியவர். எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு அதிக படங்களில் நடித்திருந்தார். இவருக்கென்று அப்போதைய காலகட்டத்தில் தனி ரசிகர் கூட்டம் இருந்தது.
சரோஜாதேவியின் தந்தை போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றியவர். ஆனால் நடிப்பு, நடனம், பாடல் என அனைத்தையும் அவரது தந்தை தான் சரோஜா தேவிக்கு முதலில் கற்றுத் தந்துள்ளார். மேலும் சரோஜா தேவியின் அம்மா மிகவும் கண்டிப்புடன் இருப்பவராம்.
சரோஜாதேவி படப்பிடிப்புக்கு செல்லும்போது அவரது அம்மாவும் எப்பவுமே கூட இருப்பாராம். இந்நிலையில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த கோகிலவாணி என்ற படத்தில் சரோஜாதேவி நடித்திருந்தார். இப்படத்தை இயக்கி, நடித்திருந்தார் எஸ் ஏ நடராஜன்.
கோகிலவாணி படத்தை நடராஜ் விஜயம் ஃபார்வேர்ட் ஆர்ட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு முதலில் சரோஜாதேவிக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்கும் போது 100 ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் படம் வெளியாகி படுமோசமான தோல்வியை சந்தித்ததால் தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு முழு சம்பளத்தையும் பணத்தை கொடுக்க முடியாத அளவுக்கு கடனில் அவதிப்பட்டு உள்ளார்.
அப்போது சரோஜாதேவி குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததால் அவரின் தாயார் நடராஜனிடம் மீதமுள்ள பணத்தைக் கேட்கும் போது உனது பெண்ணால் தான் படம் நஷ்டத்தை சந்தித்தது என கோபமாக பேசி விட்டார். இதனால் கோபமடைந்த சரோஜாதேவியின் தாயார் இப்படி எங்க வயித்துல அடிச்சிட்ட இல்ல நீ நிச்சயமா இனிமே படமே எடுக்க முடியாது என சாபம் விட்டார். அதேபோல் மீள முடியாத கடன் காரணமாக நடராஜனால் அதன் பின்பு படம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.