முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாக கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அதிலும் சர்க்கார் திரைப்படத்தின் கதை வேறு ஒருவருடையது என்று கிளம்பிய பிரச்சினை அவரது பெயரை ரொம்பவும் டேமேஜ் செய்தது.
அதை தொடர்ந்து அவர் இயக்கிய படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனாலேயே கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்தார். மேலும் முன்னணி நடிகர்களும் அவரை தவிர்த்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தான் இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கிறார்.
இப்படி இயக்குனராக அவர் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தயாரிப்பாளராக அவர் பல நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த 1947 16 ஆகஸ்ட் திரைப்படத்தை சொல்லலாம். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் அப்படத்தை இயக்கிய பொன்குமார், ஏ ஆர் முருகதாஸ் பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவர் வேறு யாரும் கிடையாது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான். அதன் அடிப்படையிலேயே இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்திருந்தார்.
அந்த வகையில் எப்பொழுதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் எப்படி அடுத்தவர் கதையை திருட முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எந்த நேரமும் அவர் எழுதுவது, கதையைப் பற்றி யோசிப்பது என்ற சிந்தனையில் தான் இருப்பாராம். சாதாரணமாக ரோட்டில் நடக்கும் போது கூட எதையாவது பார்த்தால் அதை வைத்தே ஒரு கதையை தயார் செய்து விடுவாராம். அதனாலேயே அவர் குறுகிய காலத்தில் முன்னணி அந்தஸ்தை பெற்றார்.
அப்படி இருக்கும் போது அவர் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது. இதை நான் இத்தனை வருடங்களாக நேரில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட சர்ச்சைகள் கிளம்பும்போது அவர் மன ரீதியாக கொஞ்சம் வருத்தப்படுவார். ஆனால் அடுத்த நிமிடமே தன்னுடைய இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஏ ஆர் முருகதாஸ் மீது இத்தனை நாட்களாக இருந்த ஒரு கரும்புள்ளி அகற்றப்பட்டிருக்கிறது. மேலும் திருட்டு இயக்குனர் என்ற விமர்சனத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.