ஜென்டில்மேன் படத்தின் முதல் சாய்ஸாக இருந்த ஹீரோ.. கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி

Gentleman: பிரம்மாண்ட இயக்குனராக கலக்கி கொண்டிருக்கும் ஷங்கரின் முதல் படம் தான் ஜென்டில்மேன். கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன், மதுபாலா, வினித், நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ஷங்கரும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார்.

அப்படிப்பட்ட இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் சரத்குமார் தான். இது பலருக்கும் புதிய தகவலாக இருக்கலாம். ஆனால் அவரே ஒரு பேட்டியில் இது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சரத்குமார் தான் சங்கரை வைத்து இந்த படம் பண்ணலாம் என்று கூறினாராம்.

ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவே இப்படத்தில் சரத்குமாரால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இத்தனைக்கும் போட்டோ சூட் எல்லாம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட வேலைகளும் ஆரம்பமாகி இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் ஐ லவ் இந்தியா என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

ஆனால் ஜென்டில்மேன் படத்தில் மீசை இல்லாமல் இருக்க வேண்டும் என சங்கர் கூறி இருக்கிறார். அதே சமயம் ஐ லவ் இந்தியா பட இயக்குனரான பவித்ரன் அப்படத்தில் மீசை இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு குளறுபடி நடந்தது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ஜென்டில்மேன் படத்தில் தான் சரத்குமார் நடிக்க வேண்டும் என்று கூறினாராம்.

ஆனால் சரத்குமார் ஐ லவ் இந்தியா படத்தை விட விரும்பவில்லை. ஏனென்றால் அப்படத்தின் இயக்குனர் பவித்ரன் தான் சூரியன் படத்தையும் இயக்கியிருந்தார். அதுவரை வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சரத்குமார் இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக தனி அடையாளம் பெற்றார்.

இப்படிப்பட்ட காரணங்களால் தான் சரத்குமார் இப்படத்திலிருந்து விலகி இருக்கிறார். அதன் பிறகு தான் அர்ஜுன் ஜென்டில்மேன் படத்தில் நடித்தாராம். இந்த தகவலை தற்போது சுப்ரீம் ஸ்டாரே கூறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அவர் நடித்திருந்தால் இப்படம் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு எண்ணமும் தோன்றுகிறது.