பாலா என்றாலே பஞ்சாயத்து என்று சொல்லும் அளவுக்கு பல பிரச்சனைகள் அவரை ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே எந்த சர்ச்சைகளும் இவரை குறித்து வராமல் இருந்த நிலையில் திடீரென வெளிவந்த விவாகரத்து செய்தி பூதாகரமாக வெடித்தது. அதை தொடர்ந்து பாலா சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறினார்.
அதையெல்லாம் சரிக்கட்டும் வகையில் சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை ஆரம்பித்தவருக்கு அதுவும் கைகூடவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மன வருத்தத்தின் காரணமாகவும், பாலா மீது இருந்த அதிருப்தியாலும் சூர்யா அப்பிடத்திலிருந்து விலகினார். இதற்கு முழு காரணம் பாலா தான் என்ற ரீதியில் விமர்சனங்கள் எழத் தொடங்கியது.
தற்போது அந்தப் பிரச்சினை எல்லாம் ஓய்ந்து போன நிலையில் அருண் விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் வணங்கான் திரைப்படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக கேரளாவிலிருந்து பல துணை நடிகர், நடிகைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் மூன்று நாட்கள் இப்படத்தில் நடிப்பதற்காக அவர்களுக்கு 22,000 சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு பேசிய பணத்தை அவர்கள் கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான துணை நடிகை லிண்டா இது குறித்து பிரச்சனை செய்திருக்கிறார். அப்போது இவர்களை படப்பிடிப்பிற்கு அழைத்து வந்த ஒருங்கிணைப்பாளர் ஜித்தின் ஆத்திரமடைந்து துணை நடிகையை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் காயமடைந்த லிண்டா தற்போது இந்த விவகாரத்தை காவல் நிலையம் வரை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சற்று நேரம் படப்பிடிப்பு தளமே கலவர பூமியாக மாறி இருக்கிறது. எப்போதுமே பாலா தன் படத்தில் நடிப்பவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் அடி வெளுத்து விடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தற்போது பண விஷயத்தில் துணை நடிகை தாக்கப்பட்டு இருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வணங்கான் திரைப்படம் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது. அதில் புதிதாக ஒரு ஏழரை பாலாவை சுற்றி வருகிறது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து தற்போது சமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் பிரச்சனை முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.