நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் இப்போது பாலிவுட்டிலும் பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தற்போது இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வருகிறது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூது கவ்வும். அதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக், சஞ்சிதா செட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 35 கோடி வரை வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் இப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அதைத்தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை உருவாக்குவதற்கு படக்குழு முயற்சி செய்து வந்தது.
ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது தான் அதற்கு காலம் கனிந்துள்ளது. அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தை யங் மங் சங் திரைப்படத்தை இயக்கிய அர்ஜுன் இயக்குகிறார். மிர்ச்சி சிவா ஹீரோவாகவும் சத்யராஜ், ராதாரவி, கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
அப்படி என்றால் விஜய் சேதுபதி படத்தில் கிடையாதா என்ற கேள்வி பலருக்கும் தோன்றலாம். அவர் இப்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த சம்மதித்துள்ளாராம். அந்த வகையில் சூது கவ்வும் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்கப்பட இருக்கிறது.
மிர்ச்சி சிவா தற்போது காசேதான் கடவுளடா, சுமோ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனால் அந்த இரண்டு படங்களும் இன்னும் வெளிவராமல் தாமதமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் சூது கவ்வும் 2 திரைப்படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.