தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டிலில் பல ரகசியத்தை பா. ரஞ்சித் அடக்கி வைத்திருப்பது தற்போது வெளிவந்துள்ளது
இதில் விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டார் இணைந்து நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விக்ரமின் கெட்டப் பார்ப்பதற்கே மிரள வைக்கும் அளவுக்கு உள்ளது. பான் இந்தியா படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்த படத்தை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்ததை வைத்து படத்தின் கதை களத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் தங்கலான் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து ரசிகர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வார்த்தையை பா. ரஞ்சித் ஏதோ பொத்தாம் பொதுவாக வைத்து விடவில்லை.
தங்கலான் என்பது சாதாரண வார்த்தை அல்ல. அது உணர்ச்சி பூர்வமானது. ஏனென்றால் வரலாற்றை படித்துப் பார்த்தால் 1981 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட புத்தகத்தில் தான் தங்கலான் பெயரின் முழு ரகசியமும் மறைந்துள்ளது. ‘சென்சஸ் ஆப் பிரிட்டிஷ் இந்தியா’ என்ற புத்தகத்தில் 84 பறையர் இன உட்பிரிவுகளை குறிப்பிட்டுள்ளனர்.
இதில் தமிழ் பேசும் பறையர் இனங்களில் 59-வது பிரிவாக ‘தங்கலால பறையன் என்று ஒரு இனம் இருந்திருக்கிறது. இந்த பெயர் தான் பிற்காலத்தில் பேச்சு வழக்கில் தங்கலான் என அழைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட இந்த மக்கள் இனத்தவர்களின் தலைவன், ஊர்க்காவலன், மக்கள் பாதுகாவலன், எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்று அழைத்துள்ளனர்.
மேலும் அந்த காலத்தில் தங்கம் கிடைக்கும் இடங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வசம் இருந்துள்ளது. அதை அபகரிக்க நினைத்தவர்களிடமிருந்து மக்களின் தலைவன் எப்படி படைத்தலைவர் போல் செயல்பட்டு தங்கள் இனத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் தங்கலான் படத்தின் கதை.