Vijayakanth: விஜயகாந்த் திரையுலகில் ஒரு முன்னணி அந்தஸ்தை அடைவதற்கு முக்கிய காரணம் அவருடைய உயிர் நண்பர் ராவுத்தர் தான். இது திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அறிந்தது தான். அப்படிப்பட்ட பல வருட நட்பு திடீரென விரிசல் விட்டது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் நடந்தது என்ன என்பதை ராவுத்தரின் மகன் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இருவரும் மனக்கசப்புடன் பிரியவில்லை. முழு மனதோடு பேசி முடிவு செய்து தான் விலகினார்கள் என்று கூறியுள்ளார்.
ஏனென்றால் விஜயகாந்த், ராவுத்தர் இருவரையும் பிரிப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நடந்தது. அதில் விஜயகாந்தின் உறவுகள் செய்த விஷயங்களை சில பிரபலங்கள் வெளிப்படையாகவே மீடியாவில் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் தங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் பார்த்த நண்பர்கள் ஊர் வாயை அடைக்க முடியாது. பேசாமல் நாம் பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். ஒருவகையில் இது துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது போல் தான் இருக்கிறது.
அதன்படி விலகி இருக்கலாம் என்று முடிவு செய்த விஜயகாந்த் அதை செயல்படுத்தியும் இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட அவர் நண்பனை விட்டுக் கொடுத்ததில்லை. எங்கு இருந்தாலும் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே தான் இருப்பாராம்.
அதேபோல் ராவுத்தரும் விஜி சாப்பிட்டாரா? உடற்பயிற்சி செய்றாரா? என விசாரித்துக் கொண்டே இருப்பாராம். இப்படி தூரத்தில் இருந்தாலும் மனதளவில் அவர்களின் நட்பு நெருங்கி தான் இருந்திருக்கிறது. ஆக மொத்தம் சுற்றி இருப்பவர்களின் தொல்லை தாங்க முடியாமல் தான் இப்படி ஒரு முடிவை கேப்டன் எடுத்து இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.