தனுஷ் தற்போது ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் செல்வராகவன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும், அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D44 படத்திலும் நடிக்க உள்ளாராம் தனுஷ். சன் பிக்சர்ஸ் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார்.
ஏற்கனவே மித்ரன் ஆர் ஜவகர் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான உத்தம புத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன.

நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஓரளவு உள்ள நிலையில் தற்போது அதை அதிகப்படுத்துவதற்காக படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதில் இரண்டு பேர் முதல் முறையாக தனுஷுடன் ஜோடி போடவுள்ளனர். அவர்கள் நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே தனுஷின் மாப்பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா மோத்வானியும் இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தனுஷின் மார்க்கெட்டை அதிகப்படுத்துவதற்காக மூன்று மொழிகளுக்கும் தெரிந்த நடிகைகளை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளது வியாபாரத் தந்திரம் என கூறுகின்றனர் கோலிவுட் வாசிகள்.