உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் திரைப்படம் வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அவர் தன்னுடைய கடைசி திரைப்பட அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் நடித்து வெளியாகாமல் இருந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கண்ணை நம்பாதே திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது. மு மாறன் இயக்கத்தில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி மற்றும் பிரசன்னாவின் நடிப்பு பிரமாதமாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதை தொடர்ந்து படத்தின் பல காட்சிகள் எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்துள்ளதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஒரே இரவில் நடக்கும் கொலை சம்பவம், சிசிடிவி காட்சிகள், எதிர்பாராத பல கதாபாத்திரங்கள் என மிகவும் ஈர்க்கக்கூடிய கதையாக இது இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்த போதிலும் கதை நல்லா பொழுதுபோக்கு அம்சமாகத்தான் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் பின்னணி இசையும் படத்திற்கான ஒரு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் கதை நகர்வதால் விஷுவல் காட்சிகளும் ரசிக்கும் படி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனரின் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காத வகையில் இருப்பது கூடுதல் பலம்.

இப்படி இந்த படத்திற்கான பாசிட்டிவ் கருத்துகள் வந்து கொண்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் க்ரைம் திரைப்படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் உதயநிதியின் கடைசி திரைப்படத்திற்கு முன்பாக வந்திருக்கும் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.