வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிய வாரிசு, துணிவு திரைப்படங்கள் தற்போது வசூலிலும் நல்ல லாபத்தை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் மீண்டும் மோதிக் கொள்ள இருக்கிறது. எப்படி என்றால் வாரிசு, துணிவு இரு படங்களும் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
அதாவது துணிவு திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தொடர்ந்து பல கோடி கொடுத்து கைப்பற்றி வரும் இந்த நிறுவனம் தற்போது அஜித்தின் துணிவு திரைப்படத்தையும் 65 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. அதேபோன்று வாரிசு திரைப்படமும் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.
அந்த வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் வாரிசு திரைப்படத்தை 75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இப்படி அதிகபட்ச விலைக்கு விற்பனையான இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் தான் ஓடிடியில் வெளிவர இருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 10ஆம் தேதி இந்த இரண்டு படங்களும் மீண்டும் மோதிக்கொள்ள இருக்கிறது.
இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த இரண்டு படங்களின் ரிலீசும் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது. அதில் துணிவு திரைப்படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருந்தது. அதனாலேயே இந்த திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாரிசு திரைப்படம் முதல் நாளில் கலவையான விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் அதன் பிறகு வந்த நாட்களில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை அதிக அளவில் கவர்ந்து உள்ளதால் நிச்சயம் ஓடிடி ரசிகர்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த வகையில் இந்த படங்கள் தியேட்டரில் மோதியது மட்டுமல்லாமல் இப்போது ஒடிடி தளத்திலும் மல்லுகட்ட தயாராகி இருக்கிறது. இதை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் அஜித்தின் ஏகே 62, விஜய்யின் தளபதி 67 ஆகிய படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.