வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா, கீர்த்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் தான் கஸ்டடி. இதன் மூலம் தெலுங்கில் அவர் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். அதனாலேயே இப்படத்திற்கு கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் அதிகபட்ச எதிர்பார்ப்பு இருந்தது.
அது மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இப்படம் வெற்றி பெற வேண்டும் என தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நாக சைத்தன்யாவின் ரசிகர்களை பொறுத்தவரை இப்படம் திருப்தியாக அமைந்திருக்கிறது.
ஆனால் வழக்கமாக வெங்கட் பிரபுவின் படத்தில் இருக்கும் விஷயங்கள் இருந்தாலும் விறுவிறுப்பு குறைவாக இருக்கிறது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும் இப்படத்தில் கதாபாத்திரங்களின் தேர்வும், அவர்களின் நடிப்பும் பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து இப்போது அதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. அவ்வாறு பார்க்கையில் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் வெறும் 4 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. பொதுவாக தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோக்களின் படங்கள் முதல் நாளிலேயே பட்ஜெட்டில் பாதியை எடுத்து விடும்.
ஆனால் இப்படம் இவ்வளவு குறைவாக வசூலித்திருப்பது தெலுங்கு திரை உலகில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இருப்பினும் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் படத்தின் வசூல் ஏறுமுகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோடை விடுமுறையும் ஆரம்பித்துள்ளது படத்திற்கான பிளஸ் பாயிண்ட்டாக மாறி இருக்கிறது.
அதனாலேயே இப்போது படத்தை இன்னும் அதிக அளவில் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என சோசியல் மீடியாவில் பலரும் தீயாக வேலை செய்து வருகின்றனர். ஏற்கனவே வெங்கட் பிரபு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வசூல் இறங்கு முகமாக இருக்கும் நிலையில் அவருடைய திட்டம் நிறைவேறுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.