விஜய் ஆண்டனியின் ரணப்பட்ட மனசை குத்தி கிழிக்கும் மீடியா.. மீராவின் மரணத்தை வியாபாரமாக்கும் கேவலம்

Vijay Antony: சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஒருவரின் துக்கம் கூட வியாபார நோக்கில் தான் பார்க்கப்படுகிறது. அப்படித்தான் கடந்த இரு நாட்களாகவே விஜய் ஆண்டனி மகளின் மரணம் பற்றிய செய்தி தான் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதிலும் சில மீடியாக்கள் துக்கத்தில் பங்கேற்க வரும் பிரபலங்களை பேட்டி எடுப்பது அவர்களின் சோகமான முகத்தை ஜூம் செய்து வீடியோ எடுப்பது என முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அந்த குழந்தையின் இறுதி சடங்கை கூட நிம்மதியாக செய்ய விடாமல் சுற்றி வளைத்து படம் பிடித்த விஷயங்களையும் நம்மால் பார்க்க முடிந்தது.

டிஆர்பிக்காகவும், வியூஸ் வாங்குவதற்கும் சிறு பெண்ணின் மரணத்தை வியாபாரமாக்கும் அவலம் தான் இது. மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் என்றாவது ஒரு நாள் இது போன்ற வீடியோக்களை பார்த்தால் அவர்கள் எந்த அளவுக்கு காயப்பட கூடும் என்பதை எந்த மீடியாவும் யோசிக்கவில்லை.

அதிலும் உண்மை தன்மை என்னவென்று தெரியாமல் பயில்வான் ரங்கநாதன் போன்ற பலர் இந்த விஷயத்தில் தேவையில்லாத கருத்துக்களையும் வெளியிடுகின்றனர். விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் இந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக காலம் தேவைப்படும்.

அந்த அவகாசத்தை கூட கொடுக்காத மீடியாக்களின் இந்த போக்கு தற்போது பொதுமக்களின் கண்டனத்திற்கும் ஆளாகி வருகிறது. இந்த நேரத்தில் மகளை இழந்து வாடும் அவர்களுக்கு நம்முடைய பிரார்த்தனையும், ஆறுதலும் தான் அவசியம்.

ஆனால் அதை செய்யாமல் ரணப்பட்ட மனதை குத்தி கிழிக்கும் படியான சம்பவங்கள் தான் அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிலும் இறுதி சடங்கில் மீராவின் அம்மா பேசிய வார்த்தைகள் கூட ஆடியோ வடிவில் வெளியாகி இருக்கிறது. ஒரு தாயின் அழுகையை பொழுதுபோக்காக பார்க்கும் இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும்.