வடிவேலு உதறி தள்ளிய படத்தில் ஹீரோவான விஜய்.. தளபதியின் கேரியரையே தலைகீழ புரட்டிப் போட்ட படம்

நடிகர்கள் தங்களது பட வாய்ப்புகளை நழுவ விடுவது என்பது சகஜமான ஒன்று தான். அப்படி கதையை கேட்டு நழுவ விட்ட நடிகர்கள், வேறு நடிகர்கள் அந்த படத்தில் நடித்து ஹிட்டாகி விட்டார்கள் என்றால் சில காலங்கள் கழித்து பேட்டிகளில் புலம்பும் கதையும் நடக்கும். ஆனால் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட நடிகர்கள் அந்த வெற்றிப் படத்தை வைத்து தங்களது கேரியரையே வேற லெவலில் மாற்றியமைத்து விடுவார்கள்.

அப்படித்தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு நிராகரித்த மெகா ஹிட் படம் ஒன்றில் விஜய் ஹீரோவாக நடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது 25 ஆண்டுக்காலமாக, சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளையும், சில தோல்வி படங்களையும் நடித்து இன்று தளபதியாக உருவெடுத்துள்ளார். ஒரு காலத்தில் இவரை வைத்து படம் எடுக்க சற்று யோசித்த தயாரிப்பாளர்கள் இருந்த நிலையில், இன்று விஜயை மட்டும் நம்பியே படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வந்து விட்டனர்.

அந்த அளவிற்கு விஜய் தனது சினிமா வாழ்க்கையில் முன்னேறி, இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே தென்னிந்திய நடிகராக வலம் வருகிறார். இதனிடையே விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குனர் எழில் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன், வையாபுரி, தாமு, மணிவண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பர்.

தனது எதிர்பாராத தவறால் கண்கள் பறிப்போன சிம்ரனின் கலெக்டர் கணவை நிறைவேற்ற அவரது படிப்புக்கும், பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருந்து விஜய், சிம்ரனை கலெக்டர் ஆக்குவார். பார்வை வந்தவுடன் விஜயால் தனது கண் பறிபோனது தெரியவர, கோபமடைந்து பின்னர் விஜயின் இன்னிசை பாடி வரும் பாடலை கேட்டு குட்டி குட்டி என ஓடோடி வரும் ருக்குமணியின் ஏக்கம் நிறைந்த காதல் பார்க்கும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை தேங்க வைக்கும்.

அப்படிப்பட்ட இப்படம் 1931 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் சார்லி சாப்ளின் நடிப்பில் வெளியான சிட்டி லைட்ஸ் திரைப்படத்தின் கதைக் கருவை கொண்டு எழில் இயக்கினார். இப்படம் நகைச்சுவை கலந்த படம் என்பதால் முதலில் வடிவேலுவிடம் இக்கதையை கூறியுள்ளார் எழில். வடிவேலுவுக்கு கதையெல்லாம் பிடித்து போனாலும் ஹீரோவாகி இப்படத்தில் நடித்தால், தனது நகைச்சுவை நடிகர் வாய்ப்பு பறிபோய் விடும் என எண்ணி இப்படத்தை உதறி தள்ளியுள்ளார்.

அந்த கதையை நடிகர் முரளியிடம் கூறி சம்மதம் வாங்கி ருக்குமணி என்ற பெயரில் இப்படத்தை எடுக்க முற்பட்டுள்ளார் எழில். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, இப்படத்தில் விஜயை வைத்து நடிக்க வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு பின்பு தான் விஜய் அப்படத்தில் நடித்த நிலையில், அப்படம் 150 நாட்களை கடந்து ஹிட்டானது மட்டுமில்லாமல், விஜயின் கேரியருக்கு முக்கியமான படமாக அமைந்தது.