தனது அப்பா, அம்மா மீதே வழக்குப்பதிவு செய்த தளபதி விஜய்.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவருக்கென தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிக வசூல் ஈட்டும் தமிழ் படங்களில் விஜய் படங்கள் மிகவும் முக்கியமானவையாகும். சமீபகாலமாக இவரது படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் அவரது தாய் சோபனா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது பெயரை ரசிகர் மன்றம் மட்டுமின்றி தனது பெற்றோர் கூட தன் அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி விஜய் வழக்குப்பதிவு செய்துள்ளது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய்யின் பெயரை, பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் எனவும், தனது அனுமதி இன்றி தன் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி நடிகர் விஜய் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் அவரது தந்தை உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.