நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்ட திரைப்படங்கள் அவரது தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்திலேயே நடித்திருந்தார். பல திரைப்படங்கள் இவர்களது காம்போவில் வெளியாகி தோல்வியுற்றாலும், விஜய்யை எப்படியாவது பெரிய நடிகராக ஆக்க வேண்டும் என்பதற்காக தனது சொந்த தயாரிப்பிலேயே எஸ்.ஏ.சந்திரசேகர் சில திரைப்படங்களை இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் பல திரைப்படங்கள் தோல்வியுற்றதால் நடிகர் விஜய்க்கு கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் வரை கடனாக இருந்துள்ளார். இந்த கடனை அடைக்க வேண்டும் என்றால் விஜய் ஒரு புது படத்தில் நடித்து அத்திரைப்படத்தின் ஹிட்டை வைத்து லாபத்தை பெற்று கடனை அடைக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் தங்களுக்கு இருந்த ஒரே ஒரு வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் விஜய் இருந்துள்ளார். இதனிடையே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு, நடிகர் விஜயகாந்த், விஜய், யுவராணி, கௌதமி உள்ளிட்டோரின் நடிப்பில் செந்தூரப்பாண்டி திரைப்படம் வெளியாகி ஹிட்டானது.
இத்திரைப்படத்திற்கு விஜயகாந்தை நடிக்க வைக்க, விஜய் நேரில் சென்று சந்தித்து செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டுமென்று அணுகிக் இருந்தாராம். உடனே நடிகர் விஜயகாந்த்தும், சரி கட்டாயம் நான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என தெரிவித்தாராம்.
அந்த தருவாயில், விஜயகாந்த் பல திரைப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். திடீரென சிறப்பு தோற்றத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்றால் எந்த ஒரு முன்னணி நாயகர்களும் சற்று யோசிப்பார்கள். ஆனால் விஜய்யின் நிலையை எப்படியோ அறிந்து கொண்ட விஜயகாந்த் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஹிட்டும் பெற்று தந்தார்.
இந்த விஷயத்தை சமீபத்தில் நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் விஜய் தன்னிடம் இதுகுறித்து கூறியதாகவும், விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து வெற்றி பெற்றதால் தான், என்னால் கடனை அடைத்து எனது வீட்டை மீட்டதாகவும் விஜய் நெகிழ்ச்சியுடன் தன்னிடம் தெரிவித்ததாக பகிர்ந்துள்ளார்.