இலை போட்டு வயிறார உணவிட்ட ஏழைகளின் நாயகன்.. விஜயகாந்த் ஒரு சகாப்தம்

Vijayakanth: விஜயகாந்த் இறந்து விட்டார் என்பதை இன்னும் கூட நம்ப முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு நாள் வந்திருக்கவே கூடாது என அவருடைய தொண்டர்களும், ரசிகர்களும் இப்போது ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு விஜயகாந்த் ஒரு சிறந்த தலைவனாக மட்டுமல்லாமல் ஏழைகளின் நாயகனாகவும் விளங்கினார். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தார். மேலும் முதன் முதலில் சினிமாக்காரர்களுக்கு இலை போட்டு வயிறார சாப்பாடு போட்ட பெருமைக்கு சொந்தக்காரர்.

முன்பெல்லாம் சினிமாவில் டெக்னீசியன்கள், துணை நடிகர்கள் ஆகியோர்களுக்கு பொட்டலத்தில் தான் சாப்பாடு கொடுப்பார்கள். அதை எல்லாம் பார்த்த விஜயகாந்த் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தான் சாப்பிடும் உணவையே சக நடிகர்களுக்கும் கொடுத்தார்.

இதுதான் திரை உலகில் அவர் கொண்டு வந்த முதல் புரட்சி. இதை நான் திமிராகவும், கர்வமாகவும் சொல்வேன் என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அந்த அளவுக்கு மக்களின் வயிறை நிறைய வைத்து அழகு பார்த்த கருப்பு தங்கம் தான் கேப்டன்.

அதேபோன்று சினிமா வாய்ப்பு தேடி வரும் பலரும் இவருடைய அலுவலகத்திற்கு சென்று சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் 24 மணி நேரமும் அங்கு உணவு சமைத்துக் கொண்டே இருப்பார்கள். அதேபோன்று இயற்கை பேரிடர்கள் வந்த போது ஒரு தலைவனாக இவர் அனைவருக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளை கொடுத்திருக்கிறார்.

அதன் காரணமாகவே இவரை பல்லாயிரக்கணக்கான மக்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை நாம் இழந்து விட்டோம். இப்படி அனைவரையும் கடும் துயரில் ஆழ்த்தி விட்டு சென்ற கேப்டன் நிச்சயம் ஒரு சகாப்தம் தான்.