Vijayakanth: வருடத்தின் இறுதி ஒட்டுமொத்த மக்களுக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது. கேப்டன், கருப்பு தங்கம் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த விஜயகாந்த் இன்று உயிர் நீத்துள்ளார். இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் தொந்தரவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல் அலர்ஜி இருந்ததால் தீவிர சிகிச்சை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் வென்டிலேட்டர் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற எவ்வளவு முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்று மருத்துவமனை சார்பிலும் தற்போது கூறப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
கேப்டனின் உடலை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் அவரின் இல்லத்தின் முன் திரண்டு உள்ளனர். மேலும் விஜயகாந்தின் மரணத்தை தொடர்ந்து தியேட்டர்கள் அனைத்திலும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இன்னும் சிறிது நேரத்தில் கேப்டனின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவருடைய இறுதி சடங்கு விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.