சினிமா செய்திகள்

நடிக்க விடாமல் அசிங்கப்படுத்திய கமல்.. சரியான நேரத்தில் பழி வாங்கிய பிரபலம்

By Vijay · 18 செப் 2022 · Updated 08 மே 2025
kamal-tamil-actor

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கும் கமல் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிலும் அவர் நடித்த சப்பாணி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களையும் பெற்றது.

அந்தப் பட ஷூட்டிங்கில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் பாக்யராஜ். படத்திற்கான வசனங்களையும் அவர்தான் எழுதியிருந்தார். அதில் ஒரு காட்சி கமல் வைத்தியர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் இருக்கும்.

அந்த காட்சியில் நடிக்க வேண்டியவர் வராத காரணத்தினால் பாரதிராஜா பாக்யராஜை அதில் நடிக்க கூறினாராம். அதை கேட்ட கமல் அவர் வசனங்களை சரியாக பேசுவாரா, எதற்கும் ஒரு முறை ஒத்திகை பார்த்து விடலாம் என்று கூறி இருக்கிறார். ஏனென்றால் ஆத்தா இல்லாமல் கஷ்டப்படும் மயிலுக்கு, நீதான் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்ற வசனத்தை சிறிது மாற்றி பேசினாலும் அர்த்தம் மாறிப் போய்விடும் என்று கமல் பயந்து இருக்கிறார்.

அதனால் பாக்யராஜை அவர் நடித்துக் காட்ட சொல்லி இருக்கிறார். அப்போது பதட்டத்தில் அவர் தப்பு தப்பாக வசனங்களை பேசியிருக்கிறார். இதை பார்த்த கமல் இவருக்கு நடிப்பு வராது என்று கூறி மட்டம் தட்டி பேசினாராம். இதனால் கோபமடைந்த பாக்யராஜ் பாரதிராஜாவிடம் நீங்கள் டேக் சொல்லுங்கள் நான் நடித்து காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அந்த காட்சியில் பாக்கியராஜ் சரியாக அந்த வசனத்தை பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் கமலை பார்த்து எதற்கெடுத்தாலும் கோவில் மாடு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே இரு என்று இல்லாத வசனத்தையும் சேர்த்து பேசி இருக்கிறார். ஒரு வழியாக அந்த காட்சியும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் பிறகு பாக்கியராஜிடம் பாரதிராஜா கமல் முன்னிலையில் ஏன் இல்லாத வசனத்தை பேசினாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாக்கியராஜ் அவர் என்னை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருந்தார். அதனால் தான் எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்ததும் நான் இப்படி ஒரு வசனத்தை பேசி விட்டேன் என்று கூறினாராம்.